கந்தனின் பயணம் தொடர்கிறது. கந்தனின் முந்தைய பயணத்திற்கு இங்கே கிளிக்கவும்.
கந்தன் பைக்கை மரணக் கிணற்றுக்கு ஒப்பான சென்னை பழைய மஹாபலிபுர ரோட்டில் லாவகமாக செலுத்தினான். அவனை கொல்வதே நோக்கமாக பலர் அவனுக்கு பின்னேயும் முன்னேயும் வந்து கொண்டிருந்தனர். அனைவரிடமும் தப்பித்து முடிந்த வரை மற்றவர்களுக்கு இடையூறு இல்லாதவாறு பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான் கந்தன்.
சென்னை நகர புத்திசாலி போலீஸ் வழி நெடுகிலும் குறுக்கும் நெடுக்குமாக பல இடையூறுகளை வைத்திருந்தார்கள். அது விபத்துக்களை தடுப்பதற்காக வைத்திருக்கிறார்களாம். அதில் அடிபட்டு சாகாமலிருப்பதே பெரிய விஷயம்.
திடிரென்று நடுரோட்டில் ஒரு பெண் மரண வேகத்தில் பின் வரும் வாகனங்களை கூட கவனிக்காமல் மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தாள். ஆம்புலன்ஸை மிஞ்சும் வேகத்தில் வந்து கொண்டிருந்த பல்ஸர் பாண்டிகளும், இண்டிகா திண்டன்களும் அந்த பெண் நடு ரோட்டில் அப்படி சென்று கொண்டிருந்ததால் பசையில் ஒட்டிய ஈயை போல வண்டியின் வேகத்தை குறைத்து அவள் இப்படி செல்வாளோ அல்லது அப்படி செல்வாளோ என்று தெரியாமல் திண்டாடினர்.
கந்தனும் அந்த குழப்பத்தில் மாட்டினான். ஏன் எல்லா எம தூதன்களும் திடீரென்று திண்டாடுகிறார்கள் என்று பார்த்த பொழுது அலட்சியமாக நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை கவனித்தான். உற்று நோக்கிய பொழுது தான் தெரிந்தது ராணியம்மா செல்போனில் மும்முரமாக பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்தது.
கந்தனுக்குள் இருந்த அந்நியன் விழித்துக் கொண்டான். ஆனாலும் அந்நியம் செயல் படும் முன்பு கந்தன் பின் வரும் எமன்களின் தொந்தரவால் அவளை கடந்து சென்று விட்டான். கடந்த சில நிமிடங்களிலேயே மற்றொரு ராணி அவளின் கையும் காதில் போனை பிடித்துக் கொண்டிருந்தது.
ரோட்டில் நடந்து சென்ற அத்தனை பெண்களும் கையில் ஒரு உருப்படாத போனை வைத்துக் கொண்டு தலை வடக்கேயும் தெற்கேயும் ஆட்டியவாறு பேசிக் கொண்டிருந்தனர்.
துரைப்பாக்கம் நூறடி ரோட்டில் வண்டியை திருப்பிய கந்தன் ஓரமாக ஸ்டாண்டிட்டு நிறுத்தினான். சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்யும் அப்பனிகளும், அம்மணிகளும் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தனர். அனைத்து ராணிகளின் கைகளிலும் செல்போன்.
கந்தனின் பார்வை அந்த இருட்டிலும் பளிச்சென்று இருந்த அந்த வட நாட்டு ராணியின் மேல் விழுந்தது. அந்த இருட்டிலும் அவளின் நிறம் ஜொலித்தது. அவள் காதிலும் செல்போன்.
அப்படி என்ன தான் பேசுவார்கள்? கந்தனின் மனம் கள் குடித்த குரங்காய் ஆடிக் கொண்டிருந்தது. அந்த பெண் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்ற பிரக்னையே இல்லாமல் சுவாரஸ்யமாய் போனில் பேசிக் கொண்டு நடந்து வந்தாள் அவ்ளின் பின்னே லுங்கி அணிந்த ஒரு கஜா அவளின் பின்னழகை ரசித்துக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தான்.
தன் பின்னே ஒரு கஜா வருவதை கூட கவனிக்காமல் அந்த ராணி நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்பொழுது தான் கஜா ராணி வரும் வழியில் மாட்டு சாணம் இருப்பதை கவனித்தான். சில விநாடிக்குள் அந்த ராணி பேச்சின் சுவாரசியத்தில் சாணத்தை மிதித்தாள். ஆனால் மிதித்தது கூட தெரியாமல் பேசிக் கொண்டே சென்றாள்.
கந்தனின் அருகே அவள் வந்ததும் அவளின் முன்னே நின்றான் கந்தன். அப்பொழுது அவனை நிமிர்ந்து பார்க்காமல் போனில் பேசியவாறே அவனை சுற்றி செல்ல எத்தனித்தாள் ராணி. கந்தன் அவளின் காதில் போனை பிடித்திருந்த கையை பற்றி இழுத்தான்.
அப்பொழுது தான் சற்று தீவிரத்தை உணர்ந்த ராணி அவனை நிமிர்ந்து பார்த்தாள். பார்வையில் மிரட்சி. அவன் பிடியில் இருந்து தன் கையை விடுவிக்க முயன்றாள் ராணி. போனில் இருந்து ஒரு ஆணின் குரல் "ஹலோ ஹலோ" என்று கேட்டது.
"அப்படி என்ன தான் பேசிவீங்க" என்றான் கந்தன்.
"க்யா?" என்றாள் அந்த பெண். "லீவ் மீ" என்றாள்.
கந்தன் அவளின் கையில் இருந்த செல் போனை பிடித்து இழுத்தான். கந்தனை செல்போன் திருடன் என்று நினைத்தாள் ராணி.
இதையெல்லாம் கவனித்த லுங்கி சற்று பின்னே நின்றிருந்தது.
அவளின் கையில் இருந்து பறித்த போனை ஓங்கி தரையில் அடித்து உடைத்தான் கந்தன். "ஹே ஹே வாட் ஆர் யூ டூயிங்" என்று அந்த பெண் கதற "பர்ஸ்ட் வாட்ச் யுவர் ஸ்டெப்ஸ். கெட் யுவர் செல்ப் க்ளீன்ட்" என்று கூறி பின்னே நின்றிருந்த லுங்கியை கவனித்தான் கந்தன். அந்த பெண் அப்பொழுது தான் தன் காலில் இருந்த சாணத்தை கவனித்து "ஓ ஷிட்" என்று அலறினாள்.
லுங்கியின் கையிலும் ஒரு செல் போன் இருப்பதை அப்பொழுது தான் கவனித்தான் கந்தன். சாப்பிட உணவு இருக்கிறதோ இல்லையோ இப்பொழுதெல்லாம் எல்லார் கையிலும் செல் போன் இருக்கிறது. அதிலும் லுங்கி பார்ட்டி போனில் இருந்து காதுக்கு ஒரு இயர் போன் வேறு. நான்கே எட்டில் லுங்கியின் கையில் இருந்த செல் போனை பிடுங்கி தரையில் டமார் என்று உடைத்தான் கந்தன். லுங்கி சென்னை தமிழில் கந்தனை திட்டிக் கொண்டே கந்தனின் காலரை பிடிக்க லுங்கியின் கழுத்தில் ரப்பென்று அறைந்தான் கந்தன்.
கந்தனை சுற்றி கூட்டம் கூட ஆரம்பித்தது. "இனிமே ரோட்டிலே யாராவது போனில் பேசிக்கொண்டு பல்லை காட்டி கொண்டு நடந்தால் அவ்வளவு தான்"
இதை கேட்ட மற்ற ராணிகள் சட்டென்று "ஹே அப்பறம் கால் பண்ணறேன்" என்று போனை கட் செய்து பைக்குள் வைத்தார்கள்.
கந்தன் பைக்கை எடுத்துக் கொண்டு நங்கநல்லூர் வந்தான். ஒரு ஆபிஸ் பஸ் நின்று ஆட்களை இறக்கி விட்டு சென்றது. அந்த பஸ்ஸில் இருந்து இறங்கிய அந்த பெண் தன்னுடைய கைபைக்குள் கையை விட்டு வெளியே எடுத்தாள் செல்போனை. கந்தன் தன் பைக்கை ஸ்டாண்டிட்டு அவளை நோக்கி நடந்தான்.